Headlines News : தரமான செய்திகளை இலவசமாகவும், மிக விரைவாகவும் பெற்றிட இப்போதே உங்களின் mobileலில் F(space)8aamarivu(send)40404 கட்டங்கள் இல்லாத எமது சேவையைப் பெற்று மகிழுங்கள்....

Slider

Home » » சந்திரன் எப்படித் தோன்றி இருக்கும்!?

சந்திரன் எப்படித் தோன்றி இருக்கும்!?

Written By Unknown on Friday, 6 March 2015 | 00:13

சூரியன் தோன்றியது எப்படி? தெரியும். பூமி .தோன்றியது எப்படி? தெரியும். சந்திரன் தோன்றியது எப்படி? விஞ்ஞானிகள் இக்கேள்விக்கு விடை காண இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கொள்கை கூறப்பட்டுள்ளது.

புதிராக உள்ள சந்திரனின் தோற்றம்
சந்திரன் தோன்றியது எப்படி என்ற கேள்வியை வேறு விதமாகவும் கேட்க முடியும். பூமிக்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? சந்திரன் பூமியின் ச்கோதரனா?  அல்லது பூமியின் புதல்வனா? அல்லது பூமியின் அடிமையா?
சூரியன், பூமி, சந்திரன்
பூமியும் சந்திரனும் ஒரே சமயத்தில் சூரியனிலிருந்து . தோன்றியிருந்தால் பூமிக்கு சந்திரன் ச்கோதரன். அப்படியில்லை என்பது ஏற்கெனவே நிரூபணமாகி விட்டது. பூமியிலிருந்து சந்திரன் தோன்றியிருந்தால் சந்திரன் பூமியின் புதல்வன். அப்படியும் இல்லை என்பதை விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் காட்டுகின்றன.

மூன்றாவதாக எங்கோ இருந்து வந்து பூமியின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கொண்டது என்றால் சந்திரன் பூமியின் அடிமை என்று சொல்லலாம். அப்படியும் இல்லை என்றாகி விட்டது.

நான்காவதாக ஒரு கொள்கை உண்டு. செவ்வாய் கிரகம் சைஸில் ஒரு கிரகம் பூமியின் மீது மோதியிருக்க வேண்டும். அந்த மோதலின் விளைவாக ஏற்பட்ட சிதறல்களே ஒன்று திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்.  .பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு விஞ்ஞானிகள் தைய்யா(Theia )  என்று பெயர் வைத்தனர். இந்த கொள்கைக்குத் தான் இப்போது ஓரளவுக்கு ஆதரவு உள்ளது.
பூமியின் மீது ஒரு கிரகம் மோதியதால் சந்திரன் உருவாகியிருக்கலாம் .என்பதை விளக்கும் படம்
ஆனாலும் பூமியின் வந்து மோதிய அக்கிரகம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பது குறித்தும் அது எந்த வேகத்தில் மோதியிருக்கும் என்பது பற்றியும் விஞ்ஞானிகளிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

இப்போது சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரில் உள்ள Center For Space and Habitability  என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் ரைபர் என்ற விஞ்ஞானியும் அவரது சகாக்களும் சந்திரன் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது பற்றி கம்ப்யூட்டரில் பாவனையாக வெவ்வேறு நிலைமைகளை (simulations) தோற்றுவித்து ஆராய்ந்தனர்.

இவற்றை வைத்து அவர்கள் பூமியின் மோதிய கிரகம் தைய்யாவை விடப் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்றும் தவிர, அது மிக வேகத்தில் வந்து மோதியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இவ்விதம் மோதிய கிரகம் குறைவான பொருளை மட்டும் இழந்து தன் வழியே சென்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த மோதலின் விளைவாக மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வட்டு தோன்றி அதுவே பின்னர் உருண்டு திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோதலின் போது தூக்கியெறியப்பட்ட பொருளில் பெரும் பகுதி பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சந்திரனிலிருந்து அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த கல்
இப்படியான கொள்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவை. அதாவது பூமியின் மேற்புறம் பற்றியும் பூமியில் உள்ள தனிமங்கள் அவற்றின் ஐசடோப்புகள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும். இந்த விஷயங்களில் பூமிக்கும் சந்திரனுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.சந்திரனிலிருந்து 1969 முதல் 1972 வரை ஆறு தடவைகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கொண்டுவந்த கற்கள், மண் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டு சந்திரன் பற்றி மேலும் தகவல்கள் அறியப்பட்டு வருகின்றன்.

எந்த விதமான முறையில் மோதல் ஏற்பட்டிருந்தால் பூமி, சந்திரன் இடையே இப்படி ஒற்றுமைகளும் அத்துடன் வேற்றுமைகளும் இருக்கும் என்று கண்டறிவதில் தான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இறுதியில் ஏற்கத்தக்க விடை கிடைக்க சந்திரனின் கற்கள் மேலும் விரிவாக ஆராயப்பட்டு அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பாவ்னையாக மேலும் பல .மோதல்களை நடத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம் சந்திரன் எப்படித் தோன்றியது என்பதற்கு விடை காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற்னர்.

- எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! -
Share this article :

0 comments:

 
Support : Creating Website | 8aamarivu Template | 8ஆம் அறிவு Template
Proudly powered by 8aamARIVU
Copyright © 2015. 8aamARIVU - All Rights Reserved
Template Design by www.8aamarivu.blogspot.com Published by 8aamarivu Template